நாகர்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,கோட்டாறு புத்தன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார் (47). அரசுப் பேருந்து ஓட்டுநர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் (28), ஜெயக்குமார்(22) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரவிகுமார், புத்தன்குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சதீஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் வழிமறித்து, ரவிகுமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினராம்.
இதில், பலத்த காயமடைந்த ரவிகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.