குளச்சல் அருகே மீன்பிடித்தபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவரைத் தேடும் பணி 2ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது.
கன்னியாகுமரி, அஞ்சுக்கூட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சகாய வில்சன் (43). இவர் திங்கள்கிழமை குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 14 பேருடன் மீன்பிடிக்கச் சென்றார்.
குளச்சல் மணக்குடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். சக மீனவர்கள் அவரைத் தேடினர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குளச்சல் கடலோரப் பாதுகாப்பு காவல் துறைக்கும், சகாய வில்சனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 2ஆவது நாளாக புதன்கிழமையும் தேடும் பணி தொடர்ந்தது. இதுவரை சகாய வில்சன் குறித்து எந்தத் தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.