சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் திருநாளான திங்கள்கிழமை (மே 13) தேரோட்டம் நடைபெற்றது.
இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, தெப்பத்தில் தாணுமாலய சுவாமி, அறம்வளர்த்தநாயகி அம்பாள், பெருமாள் எழுந்தருளினர். இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தெப்பத் திருவிழா தொடங்கியது. தெப்பக்குளத்தில் தெப்பம் 3 முறை வலம் வந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில், சுவாமிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.