நாகர்கோவிலில் பைக் மீது சிற்றுந்து மோதியதில் தாயும் மகளும் இறந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மேலசங்கரன்குழி பகுதியைச் சேர்ந்தவர் நாககிருஷ்ணமணி (46). இவர், ராணித் தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர், புதன்கிழமை தனது மனைவி சுதா (42), மகள் ஸ்ரீபத்மபிரியா (16) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் வந்தார். இங்குள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீபத்மபிரியாவை பிளஸ் 1இல் சேர்த்துவிட்டு, பின்னர் 3 பேரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
நாகர்கோவில் கோட்டாறு அருகே, சாலையோரம் நின்றிருந்த காரின் கதவு திடீரென திறந்ததாகவும், அதில் மோதாமலிருக்க நாககிருஷ்ணமணி பைக்கை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது பின்னால் வேகமாக வந்த சிற்றுந்து பைக் மீது மோதியதாம். இதில், நாககிருஷ்ணமணி உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சுதாவும், ஸ்ரீபத்மபிரியாவும் இறந்தனர்; நாககிருஷ்ணமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோட்டாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.