படந்தாலுமூடு மீன் சந்தையில், களியக்காவிளை பேரூராட்சி செயலர் அலுவலர் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் மறு சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், குமரி மாவட்டத்தில் இந்த வகை பிளாஸ்டிக் பைகள், பிளேட்டுகள், கப்புகள் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில், படந்தாலுமூடு சந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, களியக்காவிளை பேரூராட்சி செயலர் அலுவலர் சத்தியதாஸ் தலைமையில் ஊழியர்கள் அங்கு சோதனை செய்தனர். இதில் மீன் வணிகர்களிடமிருந்து 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வகை பிளாஸ்டிக் பைகளை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கையும் விடப்பட்டது.