குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் தூள் சிதைவு நுட்பம் ஆராய்ச்சி கருவி மைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை நிதியுதவியுடன், இப்பல்கலைக்கழகத்தின் நானோ தொழில்நுட்ப துறையில் ரூ. 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, எக்ஸ்ஆர்டி கூட்டு ஆராய்ச்சி கருவி மையத்தை பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி.மஜீத்கான் திறந்து வைத்தார். விழாவில் துணைவேந்தர் ஆர். பெருமாள்சாமி, பதிவாளர் திருமால்வளவன், இணை துணைவேந்தர் சந்திரசேகர், மனிதவளத் துறை இயக்குநர் கே.ஏ.ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கருவியின் பயன்பாடு குறித்து நானோ தொழில்நுட்பத் துறை தலைவி பி.கே. பிரசீதா கூறியது:
அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூட்டு ஆராய்ச்சி மையம் மிக அரிய கருவிகளுடன் மாணவர்களது ஆய்வுக்கு பயன் படுத்தப்படுகிறது. தூள்சிதைவு நுட்ப பொருள்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் ஒரு பொருளின் பண்புகள் அடிக்கடி அதன் படிக அமைப்பில் உள்ள அணுக்களின் மாற்றத்தை கண்டறியவும், அனைத்து விதமான நுண் ஆராய்ச்சிக்கும் இந்த மையம் இன்றியமையாததாகும்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், ரிமல் ஈசாக், ஜோசப், கணபதிராமன் ஆகியோர் கொண்ட உயர்மட்ட ஆராய்ச்சி அமைப்பு, இம்மையத்தின் கூட்டு ஆராய்ச்சிக்கு உதவும் என்றார் அவர்.