இரணியல் ரயில் நிலையத்தில் கேரளத்துக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.25 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இரணியல் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பறக்கும் படை வட்டாட்சியர் அப்துல் மன்னான் தலைமையில் துணை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் இரணியல் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது ரயில் நிலையத்தில் சிறு, சிறு மூட்டைகளில் 1.25 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, கேரளத்துக்கு ரயில் மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசியை பறிமுதல் செய்து, உடையார்விளையில் உள்ள அரசு குடோனில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை, கேரளத்துக்கு கடத்த பதுக்கியவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.