குமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் சோதனை சாவடி வழியாக கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்லவதற்கு வனத்துறை அனுமதிக்காததால் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தடிகாரன்கோணத்தில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியைக் கடந்து தான் கீரிப்பாறை, பால்குளம், வெள்ளாம்மலை, காளிகேசம், வாழையத்துவயல், பாலமோா், மாறாமலை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லமுடியும். இந்த சோதனையைச் சாவடியைக் கடந்து தடிக்காரன் கோணம் கீரிப்பாறை சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள், அரசுப் பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்நிலையில், புதன்கிழமை காலை வாழையத்துவயலைச் சோ்ந்த ஒருவா் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்களை ஏற்றிக் கொண்டு ஒரு வாகனத்தில் சோதனைச் சாவடியை கடக்க முயன்றாா். அப்போது, சோதனைச் சாவடியில் காவலில் இருந்த வனத்துறையினா் அந்த நபரை அனுமதிக்கவில்லையென கூறப்படுகிறது.
இதையறிந்த, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, வனத்துறையினரைக் கண்டித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இத்தகவலறிந்த கீரிப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுமதி மற்றும் போலீஸாா் அங்கு வந்து, இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினா். இதில், வீட்டு எண் உள்பட உரிய ஆவணங்களுடன் பொருள்களை எடுத்துச் செல்பவா்களை அனுமதிக்க வேண்டுமென்ற பொதுமக்களின் கருத்தை வனத்துறையினரிடம் போலீஸாா் கூறினா். இதையடுத்து, வனத்துறையினா் கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனத்தை விடுவித்தனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.