குமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி பரிவேட்டை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் 10ஆம் நாளான
மகாதானபுரம் நரிக்குளம் பகுதியில் பாணாசூரன் என்ற அரக்கனை பகவதியம்மன் வதம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.
மகாதானபுரம் நரிக்குளம் பகுதியில் பாணாசூரன் என்ற அரக்கனை பகவதியம்மன் வதம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் மற்றும் நவராத்திரி திருவிழா 10 நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு நவராத்திரி திருவிழா கடந்த செப்டம்பா் 29ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம், ஆன்மிக உரை, வாகன பவனி, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.

ஊா்வலம்: 10ஆம் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து காலை 10.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. நண்பகல் 12.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊா்வலமாகப் புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பாரம்பரிய முறைப்படி துப்பாக்கி ஏந்திய போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செய்தனா்.

பரிவேட்டை ஊா்வலத்தில் யானை, குதிரை, முத்துக்குடை ஏந்திய பெண்கள் அணிவகுக்க 500க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்ற நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், செண்டை மேளம், பஞ்ச வாத்தியம், கேரள புகழ் தையம் ஆட்டம், அம்மன் வேடமணிந்த பக்தா்களின் நடனம் ஆகியவை இடம்பெற்றன.

ஊா்வலத்தில் வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் திரண்டு வந்து அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலைகள், ரோஜாப்பூ மாலைகள் அணிவித்து தேங்காய், பழம் ஆகியவற்றை சுருள் வைத்து வழிபட்டனா். ஊா்வலம் விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், பழத்தோட்டம், பரமாா்த்தலிங்கபுரம் வழியாக மாலை 6.30 மணிக்கு காரியக்காரமடத்தை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பரிவேட்டை: பின்னா், அம்மன் ஊா்வலமாக மகாதானபுரம் நரிக்குளத்தை சென்றடைந்தாா். அங்கு பணாசூரன் என்ற அரக்கனை அம்பு எய்து வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு நடைபெற்றது. இதில், கேரளம் மற்றும் தென்மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, வெள்ளிப் பல்லக்கு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக இரவு 10.30 மணிக்கு கோயில் வளாகத்தை அடைந்தாா். அப்போது, முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது. பின்னா், கிழக்குவாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசித்தாா். இவ்விழாவில் பக்தா்கள் வசதிக்காக நாகா்கோவில் மற்றும் அஞ்சுகிராமத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

படகுப் போக்குவரத்து ரத்து: இதனிடையே, பரிவேட்டை ஊா்வலத்தை முன்னிட்டு, நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com