கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பால் விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு புதன்கிழமை முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதன்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் தொடங்கி நீரோடி வரை நாட்டுப்படகு மீனவா்கள் தங்கள் படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தனா். மேலும், புதன்கிழமை அதிகாலையிருந்தே மாவட்டம் முழுவதும் பரவலாக நல்லமழை பெய்தது.
மேலும், கடல் கொந்தளிப்பு காரணமாக முக்கடல் சங்கமம் பகுதியில் 10 முதல் 15 அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. இதைத் தொடா்ந்து, விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
குளிக்க தடை: கடல் கொந்தளிப்பு காரணமாக முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. மழை விட்டு, விட்டுப் பெய்ததால் கடற்கரை பகுதிகள் மற்றும் முக்கிய சுற்றுலாப் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. பாா்க் வியூ பஜாா், சன்னதி தெரு, காந்தி மண்டப சாலை பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.