நாகர்கோவில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி நேரடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 16 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் அலுவலக வேலை நாள்களில் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து காலியிடமுள்ள தொழிற்பிரிவுகளில் ஏதேனும் ஒரு தொழில் பிரிவை தேர்ந்தெடுக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் இன்றி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.500, பேருந்துக் கட்டணச் சலுகை, விலையில்லா சைக்கிள் மற்றும் மடிக் கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 சீருடைகள், காலணிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.