கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில்பயனாளிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே திங்கள்கிழமை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்தார். கல்வி உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 471 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், கல்குளம் வட்டம், வாள்வச்சகோஷ்டம் கிராமத்தைச் சேர்ந்த வில்பிரட் என்பவர் நிகழாண்டு ஜூன் மாதம் மின்சாரம் பாய்ந்து இறந்ததை அடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம், கிள்ளியூர் வட்டத்தில்இனையம் புத்தன்துறை கிராமத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு மீன்பிடிக்க சென்று உயிரிழந்த நெல்சன், ராஜ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் உள்பட முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் உதவித் தொகைக்கான காசோலையை அவர்களது குடும்பத்தினரிடம் ஆட்சியர் வழங்கினார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஏ.எஸ்.அபுல் காசிம், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.