ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கேரள மாநிலத்தின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில்

கேரள மாநிலத்தின் முக்கிய விழாவான ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் புதன்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக கடந்த 10 நாள்களாக கேரள மாநில மக்களும், கன்னியாகுமரி மாவட்ட மக்களும் அத்தப்பூ கோலமிட்டும், ஊஞ்சலாடியும், கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டும் வந்தனர். இப்பண்டிகையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கும் சில நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது; தங்கும் விடுதிகள் நிரம்பின.
இந்நிலையில், கேரளத்திலும், கன்னியாகுமரியிலும் ஓணம் பண்டிகை புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர். சன்னதித் தெரு, காந்தி நினைவு மண்டபம், முக்கடல் சங்கமம், கடற்கரைச்  சாலை, சன்செட் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
போக்குவரத்துப் பாதிப்பு: கன்னியாகுமரிக்கு அதிகமான வாகனங்கள் வந்ததால் சுசீந்திரம் தொடங்கி கன்னியாகுமரி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விவேகானந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com