வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதிஉதவியுடன் "Kaushal Se Kushaltha" திட்டத்தின்கீழ் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் (CFTI) மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும். மேலும், பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின்கீழ் ஸ்டிச்சர் கூட்ஸ், கார்மென்ட்ஸ் மற்றும் பிரி அசெம்பிளி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் 46 நாள்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 பேர் வீதம் எனமொத்தம் 40 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
திட்டத்தின்கீழ் மத வழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு, பயிற்சி உதவித்தொகையாக ரூ.1534 அளிக்கப்படும். உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது. இதற்கான நேர்காணல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், 64 சி, சாலைதெரு, குஜராத் சத்திரம் அருகில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில்
(FIUI) செப்.20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயிற்சிபெற விரும்புவோர் அசல் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.