சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் இலவச கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் சனிக்கிழமை ( செப். 14) காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரித் தாளாளர் அருள்பணி மரிய வில்லியம், தமிழ்நாடு சிறு- குறு கிராமிய தொழில்முனைவோர் சங்கச் செயலர் எம்.ஞானசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
"குடும்பத்துக்கு ஒரு தொழில்முனைவோர், கிராமத்துக்கு ஒரு ஆடிட்டர்' என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி, கல்லூரியில் நடைபெறும் இந்தக் கருத்தரங்குக்கு, ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமை வகிக்கிறார். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் முன்னிலை வகிக்கிறார். தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முகாமை தொடங்கிவைப்பதுடன், தொழில்முனைவோருக்கான கையேட்டை வெளியிட்டு, தொழில்முனைவோர் மற்றும் ஆடிட்டர் ஆக விரும்புவோருக்கு கடனுதவி வழங்குகிறார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீ நாத், இந்திய அரசின் தில்லி, சிறு-குறு, நடுத்தர தொழில்கள் துறை வளர்ச்சி ஆணையரின் கூடுதல் தொழில் ஆலோசகர் ஜி.சண்முகநாதன், இந்திய அரசின் வருமான வரித் துறை திருநெல்வேலி- நாகர்கோவில் கூடுதல் ஆணையாளர் எம்.ஜெயராம், சென்னை முன்னாள் மேயர் சைதை ச.துரைசாமி ஆகியோர் தொழில்துறை குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளனர். பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பயிற்சி அளிக்கின்றனர். தொழில்முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருள்களை காட்சிப்படுத்தி விளக்கம் அளிப்பர். சிறந்த தொழில்முனைவோர், மூத்த ஆடிட்டர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
தற்போது, நாட்டுக்கு பல லட்சம் ஆடிட்டர்கள் தேவை. இதையறிந்து, தமிழ்நாடு அரசு பல்லாயிரம் இளைஞர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி தர திட்டமிட்டுள்ளது. இதில், மாவட்ட கல்லூரிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கின்றனர் என்றனர்.
அப்போது, அருள்பணி. எம்.சி.ராஜன், மகளிர் தொழில்முனைவோர்- கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயமதி ரோஸாரியோ ஆகியோர் உடனிருந்தனர்.