பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி நாகர்கோவிலில் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை 2 ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஒவ்வொரு மாதமும் தாமதமின்றி ஊதியம் வழங்க வலியுறுத்தியும், வேலை நேரக் குறைப்பு நடவடிக்கைகளை கைவிட கோரியும் வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையொட்டி 2 ஆது நாளாக வெள்ளிக்கிழமை நாகர்கோவில், பால்பண்ணை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் முன்பு தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். அகில இந்திய துணை பொதுச் செயலர் சி.பழனிச்சாமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பி.ராஜூ, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் செல்வம், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பேசினர்.
இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், சின்னத்துரை, ஜெயபால், மகேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.