மார்த்தாண்டம் அருகே வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). கடந்த 2015 இல் பெண் விவகாரத்தில்இளைஞர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ரமேஷ், மார்த்தாண்டம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் ரமேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, பரோலில் வெளியே வந்த இவர் தலைமறைவாகி விட்டாராம். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவருக்கு பிடிஆணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து இவரை மார்த்தாண்டம் போலீஸார் தேடி வந்தனர்.
கேரளத்தில் தலைமறைவாக இருக்கும் ரமேஷ் பெற்றோரை சந்திப்பதற்காக ஊருக்கு வந்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கர் தலைமையில் போலீஸார் வெட்டுவெந்நி பகுதியில் வைத்து ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.