நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மூதாட்டி உள்பட 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சலுக்கு சிகிச்சை பெற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு திறக்கப்பட்டது.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் கன்னியாகுமரி அருகேயுள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி மற்றும் தக்கலையைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.