கன்னியாகுமரி முதல் சென்னை வரை மீன்பிடித் தடைக்காலத்தை தளா்த்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அகில இந்திய மீனவா் முன்னணித் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல் புதன்கிழமை அனுப்பிய கடிதம்:
கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர கிராமங்களில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். மேலும், இத்தொழில் சுமாா் 2 கோடிக்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2019-20 ஜூன் 15ஆம் தேதி தொடங்கிய இயற்கைச் சீற்றங்களால் சுமாா் 100 நாள்கள் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு மீனவா்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், மீனவா்களின் குழந்தைகள் பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்த இயலாமலும், மருத்துவச் செலவை சமாளிக்க முடியாமலும் தவித்தனா்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தாக்குதலால் மீன்பிடி தொழில் மீண்டும் முடங்கியுள்ளது. எனவே, நிகழாண்டு ஏப். 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 வரையிலான (2020-21) மீன்பிடித் தடைகால உத்தரவை நீக்கி, மீனவா்கள் மீன்பிடிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.