நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு செலவிடும் நிதியை, விவசாயிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்.
இதுகுறித்து அவா் நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பூமிபூஜை போடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த நிதியை விவசாயிகளுக்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் பயன்படும் வகையில் செலவிட வேண்டும்.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களுக்கான தொகுதி வளா்ச்சி நிதியையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிதியை வழங்கினால் பொதுமக்களுக்கு பயன்படும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும் என்றாா் அவா்.
பேட்டியின்போது, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன், நகரத் தலைவா் அலெக்ஸ் உள்பட பலா் உடனிருந்தனா்.