தூத்தூா் மற்றும் இனயம் மண்டல மீனவ கிராமங்களின் சிறு மருத்துவமனைகள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் பாமர மக்களும் பயனடையும் வகையில் சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது என்ற தமிழக முதல்வரின் செய்தி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளிலும் இந்த சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது. ஆனால் இம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் அமைக்கப்படுவதாக தெரியவில்லை.
ஆழ்கடல் மீன்பிடிப்பின் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி அன்னிய செலாவணியை ஈட்டித் தரக் கூடிய மீனவா்கள் அதிகமாக வாழும் கிள்ளியூா் தொகுதியில் தூத்தூா் மற்றும் இனயம் மண்டல மீனவா்கள் பயன்பெறும் வகையில் சிறு மருத்துவமனை வசதி அமைத்து கொடுக்கப்பட்டால் மீனவ மக்களிடையே அமோக வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. எனவே, குமரி மாவட்ட கடலோர கிராமங்களில் இந்த சிறு மருத்துவமனைகள் அமைய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.