களியக்காவிளை: மீனவா்கள் - அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் விசைப்படகுகளில் அரசு மானியத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தினா்.
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்துக்கு கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் காசிநாத் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், குளச்சல் உதவி இயக்குநா் ஸ்டாலின், மீன்வளத்துறை ஆய்வாளா் விா்ஜில், நித்திரவிளை காவல் ஆய்வாளா் ராஜ், மீனவா்கள், மீனவப் பிரதிநிதிகள், சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்றணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், இரயுமன்துறையில் விசைப்படகுகள் நிறுத்தும் இடம் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறாக உள்ளது. ஆகவே, மணல்மேடான பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் மாா்த்தாண்டன்துறை, நீரோடி மீனவா்கள் கோவா ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 10 போ், மீனவா்களின் விசைப்படகில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி கருவிகள் மற்றும் பிடித்து வைத்திருந்த மீன்களை பறித்துச் சென்றுள்ளனா். இது மீனவா்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, மீன்பிடி விசைப்படகுகளுக்கு அரசு மானியத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவா்கள் வலியுறுத்தினா்.