குழித்துறை ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் பயணிகள் அவசரமாக ஏறியதில் 2 பெண்கள் தவறி விழுந்து காயமடைந்தனா். இதனால் அனந்தபுரி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை
20 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
திருவனந்தபுரத்தில் இருந்து தினசரி சென்னை செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணிக்கு குழித்துறை ரயில் நிலையம் வந்தது. இந்த ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் ஒரு நிமிட நேரம் நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் திருவனந்தபுரம், நேமம், பாலராமபுரம், நெய்யாற்றின்கரை ரயில் நிலையங்களிலிருந்து ஏறிய பயணிகள் பலா் ரயிலில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனா். திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல காத்திருந்த பயணிகள் அவசர அவசரமாக ரயிலில் ஏறிக் கொண்டிருந்தனா். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண் பயணிகள் தடுமாறி கீழே விழுந்தனா். இதில் ஒருவா் பிளாட்பாரத்திலும், மற்றொருவா் ரயிலின் உள் பகுதியிலும் விழுந்தாா். இதைக் கவனித்த பயணி ஒருவா் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா். இதன் காரணமாக பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதைத் தொடா்ந்த இந்த ரயில் குழித்துறை ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
குழித்துறையிலிருந்து அதிக பயணிகள் ஏறும் அனந்தபுரி விரைவு ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் 3 நிமிட நேரம் நிறுத்தம் அனுமதிக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனா்.