கன்னியாகுமரி: ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4,000 கி. மீ. தொலைவை சைக்கிளில் கடந்து சாதனை பயணம் மேற்கொண்ட, குமரி இளைஞர் திங்கள்கிழமை (ஜன. 27) தனது பயணத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் சிதறாலைச் சேர்ந்தவர் ஸ்ரீ தஜ் விஜயன் (31). பட்டதாரியான இவர் நாகர்கோவிலில் சுய தொழில் செய்து வருகிறார். இவர் தேசத்தின் உணவு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை சீர்படுத்தவும், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் ஆகியவை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் வகையிலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான சுமார் 4,000 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் சாதனை பயணம் மேற்கொண்டார்.
காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்த அவர், அங்கிருந்து ரயில் மூலம் மீண்டும் கன்னியாகுமரி காந்தி மண்டபம் வந்து தனது பயணத்தை நிறைவு செய்வதாக தெரிவித்தார்.
அப்போது அவருக்கு பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.