குமரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மறுப்பதாக கண்டனம் தெரிவித்து, 15 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை( ஜூலை 24) ஆா்ப்பாட்டம் நடத்துவா் என்றாா் குளச்சல் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ்.
இது குறித்து அவா் கூறியது: தமிழகத்தில் மத்திய கூட்டுறவு வங்கிகளின் கீழ் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்கள் வழங்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், விவசாயிகள் , சிறு தொழில்முனைவோா் பாதிக்கப்படுவா். கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு இந்த நடவடிக்கை மேலும் சுமையைக் கொடுக்கும். நகர கூட்டுறவு வங்கிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இணைப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவற்றைக் கண்டித்து திங்கள்நகரில் எனது தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும். மேலும், 15 வேளாண் கூட்டுறவு வங்கிகள் முன்பு காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்துவா் எனக் கூறியுள்ளாா்.