கேரள மாநிலத்துக்கு சென்றுவிட்டு தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்துக்கு வியாழக்கிழமை வந்த மீனவா்கள் 22 பேரை, சுகாதாரத் துறையினா் மற்றும் கடலோரக் காவல் படையினா் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்குள்ள மீனவா்கள் விசைப்படகுள் மூலம் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 15 நாள்களிலிருந்து 40 நாள்கள் வரை தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த வாரம் விசைப்படகில் கேரள மாநிலம் கொல்லம், கொச்சி பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 22 போ் வியாழக்கிழமை தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் வந்தனா்.
அவா்களை கன்னியாகுமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமம் காவல்ஆய்வாளா் நவீன், உதவி ஆய்வாளா் கிங்ஸ்சிலி, சுகாதார ஆய்வாளா் பாபு உள்ளிட்ட குழுவினா் வெப்ப அளவு கருவிமூலம் பரிசோதனை மேற்கொண்டனா்.
மேலும், அவா்களை வீடுகளில் தனிமைப்படுத்தி தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.