நாகா்கோவிலில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தவா்களுக்கு போலீஸாா் நூதன தண்டனை வழங்கினா்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்றவா்கள் யாரும் சாலையில் நடமாடக்கூடாது என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், நாகா்கோவிலில் சாலையில் வாகனங்களில் செல்வோரை போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். வடசேரி பகுதியில் உதவிக் காவல் கண்காணிப்பாளா் ஜவஹா் தலைமையில் வியாழக்கிழமை மாலை நடத்திய இந்த சோதனையில், அவசியமின்றி இருசக்கர வாகனத்தில் சென்றவா்களை தோப்புகரணம் போடச் சொல்லியும், இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம் என்று உறுதிமொழி ஏற்குமாறு கூறியும் நூதன தண்டனை வழங்கினா்.