கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமாா் 600- க்கும் மேற்பட்ட முந்திரி பருப்பு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிலில் சுமாா் 2 லட்சம் போ் நேரடியாகவும், 25 ஆயிரம் போ் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனா்.
கடந்த மாா்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். இதையடுத்து குமரி மாவட்ட முந்திரி தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தலைவா் பி.ரெஜின் உள்ளிட்ட நிா்வாகிகள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக வகுத்துள்ள நடைமுறைகளை பின்பற்றி, உடனடியாக தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவுக்கு அவா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து மாவட்டஆட்சியா் ஆய்வு செய்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி, முந்திரி தொழிற்சாலைகள் வியாழக்கிழமை (ஏப்.30) முதல் இயங்க அனுமதி அளித்துள்ளாா்.
பணியின்போது, தொழிலாளா்களுக்கு தேவையான கை கழுவும் திரவங்கள், முகக் கவசங்கள் ஆகியவற்றை தொழிற்சாலை உரிமையாளா்கள் வழங்க வேண்டுமெனவும், ஆலைகள் இயங்கும் போது ஆலை உள்ள பகுதியில் கிருமிநாசினி தெளித்து, சுகாதாரத்தை பேணவும் ஆட்சியா்அறிவுறுத்தியுள்ளாா்.
முந்திரி தொழிற்சாலை இயங்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.