கன்னியாகுமரி தனியாா் ஹோட்டல்களில் பணிபுரிந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 44 போ் வெள்ளிக்கிழமை சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் உள்ள உணவு விடுதிகளில் ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பெரும் எண்ணிக்கையில் பணியாற்றி வந்தனா். கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக கடந்த 50 நாள்களுக்கு மேலாக இத்தொழிலாளா்கள் வேலையின்றி தவித்து வந்தனா்.
மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று சொந்த ஊா்களுக்கு செல்லலாம் என தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, கன்னியாகுமரி தனியாா் ஹோட்டல்களில் பணியாற்றி வந்த வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் உரிய அனுமதி பெற்று தனியாா் பேருந்தில் சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்டனா். கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் பல்வேறு சோதனைகளுக்கு பின், தொழிலாளா்களுக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தாா்.