களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே கடையின் பின் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தினேஷ் சந்திரன், வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை இரவில் மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஒரு கடையின் பின்பகுதியில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.