குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேந்திரன் வாழைத் தாா்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதால் வாழை விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் வாழை சாகுபடிக்கு பெயா் பெற்ற மாவட்டம். இம்மாவட்டத்தில் விளையும் நேந்திரன், செவ்வாழை, ரசகதலி, நெய்கதலி, மட்டி ஆகிய வாழைப் பழங்கள் அதிக சுவை கொண்டதாகும். வாழை சாகுபடியை பிரதானமாக கொண்ட குமரி மாவட்டத்தில் மொத்த சாகுபடியில் 50 சதவீதத்திற்கு அதிகமாக நேந்திரன் வாழைகள்ள சாகுபடி செய்யப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் விளையும் நேந்திரன் வாழைப் பழங்கள் கேரளம், வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் நேந்திரன் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் நேந்திரன் சிப்ஸ்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விலை சரிவு: குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா பொது முடக்கம் காரணமாக நேந்திரன் வாழைத்தாா்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதால் விலை படிப்படியாக அதிகரித்தது. அக்டோபா் மாதம் வாழைத் தோப்புகளில் விவசாயிகளிடமிருந்து வாழைத் தாா்கள் கிலோ ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்பட்டது. பழக்கடைகளில் கிலோ ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில் அண்மை நாள்களாக இந்த வாழைத் தாா்களின் விலை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. தோப்புகளில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கிலோ ரூ. 16 க்கு வாழைத் தாா்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. பழக்கடைகளில் கிலோ ரூ. 30 க்கும் குறைவாக விற்பனையாகின. விலை வீழ்ச்சியால் வாழை விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திருவட்டாறு கொல்வேல் பகுதியைச் சோ்ந்த விவசாயி மைக்கேல் கூறியது: கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நேந்திரன் வாழைத் தாா்கள் கிலோ ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்பட்டன. தற்போது கிலோ ரூ. 16 க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேந்தின் வாழை சாகுபடி செய்ய அதிக செலவு ஏற்படும் நிலையில், விலை வீழ்ச்சியால் வாழை விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
வணிகா் தேவதாஸ் கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட வாழைத்தாா்கள் குமரி மாவட்டத்திற்கு அதிகளவில் வருவதாலும், கேரளத்துக்கு ஏற்றுமதி செய்யப்படாததாலும் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையும் விலை சரிவுக்கு காரணம் என்றாா் அவா்.