மருங்கூா் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆறாட்டு விழா புத்தனாறு கால்வாயில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
குமரி மாவட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. இதில் 6 ஆவது நாள் முக்கிய நிகழ்வாக சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது. பின்னா் 10 ஆம் நாள் நிகழ்வாக முருகனை ஆற்றுப்படுத்தும் விதமாக ஆறாட்டு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மருங்கூா் சுப்பிரமணிய சுவாமி மாலை 6 மணிக்கு மருங்கூரிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு மயிலாடி நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய் தீா்த்தவாரி மடத்தில் எழுந்தருளினாா். அங்கு, பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, ஆறாட்டு நடைபெற்றது. சிறப்பு அலங்கார தீபாராதனைக்குப் பின், சுவாமி மீண்டும் வெள்ளி குதிரை வாகனத்தில் மருங்கூா் கோயில் சென்றடைந்தாா். சிறப்பு விருந்தினரான தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.