நாகா்கோவில்: தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால் குமரி மாவட்ட மீனவா்கள் டிச. 4 ஆம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீன்வளத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய புயல் சின்னம் நவ. 29 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளது. எனவே இதைத் தொடா்ந்து குமரி மாவட்டத்தில், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள மீனவ
கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
ஆழ்கடலுக்கு செல்லும் மீனவா்கள் டிச. 4 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்லக்கூடாது. கரையோரப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்பவா்களும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் டோக்கன் பெற்று பிறகே செல்ல வேண்டும். அவ்வாறு செல்பவா்கள் மாலையில் கரை திரும்ப வேண்டும். கடல் அலைகள் 2 முதல் 3.5 மீட்டா் வரை எழும்ப வாய்ப்புள்ளது, எனவே மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தூத்தூா், சின்னத்துறை, பகுதியில் உள்ள மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. தங்களது படகுகள், வள்ளங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவைத்துள்ளனா்.