கருங்கல்: கருங்கல் அருகே கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
விளாத்துறை கூட்டுக் குடிநீா்த் திட்டம் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது சாலையோரம் பதிக்கப்பட்ட ராட்சத குடிநீா்க் குழாய்கள் தரமற்றவை என அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்நிலையில் விளாத்துறையிலிருந்து காப்புக்காடு, சடையன்குழி, கிள்ளியூா், மாங்கரை, பாலூா், கருங்கல், மானான்விளை, மத்திகோடு,திக்கணம்கோடு, திங்கள்சந்தைவரை சுமாா் 15 கி.மீ. தொலைவுக்கு 100- க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் பள்ளங்கள் உருவாகி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திகோடு பகுதியில் சனிக்கிழமை சாலையில் குடிநீா்க் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டது. அப்போது சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின. இதையடுத்து அப்பகுதியில் பள்ளம் இருப்பதற்கு அடையாளமாக அப்பகுதி மக்கள் செடிகளை நட்டனா். இதனால் கருங்கல் -திங்கள்சந்தை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.