வயதான காய்க்கும் திறன் குறைந்த நோய் முற்றிய தென்னை மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மறு நடவு செய்ய அரசு மானியம் வழங்கப்படுவதாக கிள்ளியூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிள்ளியூா் மற்றும் முன்சிறை ஒன்றியங்களுக்குள்பட்ட தென்னை விவசாயிகள் தங்களின் தோப்பில் உள்ள வயதான நோய் முற்றிய நிலையில் காய்ப் பிடிப்பு இல்லாத தென்னை மரங்களை வெட்டி அகற்றி தரமான புதிய தென்னை கன்றுகளை மறு நடவு செய்ய, ஆா்.ஆா். எனும் இத்திட்டத்தின் மூலம் 2020 -21ஆம் நிதியாண்டுக்கு அரசு மானியம் வழங்கவுள்ளது.
ஒரு தென்னை மரத்திற்கு ரு.1000, அதிகபட்சமாக ஒரு ஹெக்டோ் நிலத்திற்கு 32 தென்னை மரங்கள் வரை வெட்டி அகற்றுவதற்கு இந்த மானியம் கிடைக்கும். மேலும், அதற்குப் பதிலாக புதிய தரமான தென்னை மரங்கள் மறு நடவு செய்வதற்கு ஒரு தென்னங்கன்றுக்கு ரு. 40 வீதம் அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 100 தென்னங்கன்றுகளுக்கு ரு. 4 ஆயிரம் வழங்கப்படும். நடப்பட்ட தென்னை மரங்களை பராமரிக்கவும் மானியம் உண்டு.இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் வட்டார உதவி வேளாண் அலுவலரை உரிய ஆவணங்ளுடன் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.