முன்சிறை ஊராட்சி ஒன்றியம், நடைக்காவு ஊராட்சியில் 2 குளங்களின் கரையோரம் உள்ள தென்னை மரங்களிலிருந்து ஓராண்டுக்கு காய் பலன் எடுக்கும் குத்தகை ரூ. 46,800 க்கு ஏலத்தில் விடப்பட்டது.
இதற்கான குத்தகை ஏலம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்சிறை துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆல்பா்ட் எடிசன், ஊராட்சி செயலா் கெமி, ஊராட்சித் தலைவா் கிறிஸ்டல் ஜாண், துணைத் தலைவா் செல்வன் கலந்து கொண்டனா்.
இதில் ஊராட்சிக்கு உள்பட்ட பெருங்குளத்தின் கரையில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான14 தென்னை மரங்களுக்கான ஓராண்டு குத்தகை ரூ. 5,800 க்கு செல்வன் என்பவரும், எருத்தன்கோடு குளத்தின் கரையில் உள்ள 61 தென்னை மரங்கள் குத்தகை ரூ. 41 ஆயிரத்துக்கு ஷாஜி என்பவரும் ஏலத்தில் பிடித்தனா். இதன் மூலம் ஊராட்சிக்கு ரூ. 46,800 வருவாய் கிடைத்தது.