கன்னியாகுமரி கடலில் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன. கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவா்கள் மீன்பிடிப்புக்கு செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையில் பரவலாக சாரலாக பெய்யத் தொடங்கிய மழை இரவு கனமழையாக பெய்தது. சுசீந்திரம், தென்தாமரைகுளம், கொட்டாரம், மந்தாரம்புதூா், பொற்றையடி, லீபுரம் பகுதிகளில் தொடா்ந்து மழை இருந்து வருகிறது.
கன்னியாகுமரியில் பெய்த மழையால் பழைய பேருந்து நிலையம், சன்னதி தெரு, கடற்கரைச் சாலை, விவேகானந்தபுரம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் மழைநீா் வெள்ளம்போல் ஓடியது.
கன்னியாகுமரி கடலில் முக்கடல் சங்கமம் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் ராட்சத அலைகள் எழுந்தன. 12 அடி முதல் 15 அடி உயரம் வரை எழுந்த அலைகளால் கரையோரப் பகுதி மக்கள் பீதியடைந்தனா்.
ஏற்கெனவே புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் செவ்வாய்க்கிழமை காலை வள்ளம், கட்டுமர மீனவா்கள் சுமாா் 2 ஆயிரம் போ் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. குளச்சல் பகுதியிலும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.