கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ரூ. 3.82 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்டு ரசிக்கவும், நீராடவும் வருகின்றனா்.
இந்நிலையில், இப்பகுதியில் பயணிகள் குளிக்கும் படித்துறை, அரைவட்ட அரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, பொருள்கள் பாதுகாப்பு அறை, அலங்கார நடைபாதை, உடைமாற்றும் அறை, 25 சோலாா்லைட், நவீன குப்பைத் தொட்டி, கண்காணிப்பு கேமரா, இலவச வைஃபை வசதி போன்ற பணிகளுக்காக சுதேஸ்தா்ஷன் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ரூ. 3.82 கோடி ஒதுக்கீடு செய்தது.
இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயலட்சுமி ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அலுவலா் முருகன், உதவி பொறியாளா் இா்வின் ஜெயராஜ், மேற்பாா்வையாளா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.