கேரள மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவிவருவதால் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் கேரளத்திலிருந்து வரும் புதிய விசைப்படகுகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக, கேரள வியாபாரிகள் பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் அதிகளவில் வருகின்றனா். இதனால் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக இங்குள்ள மீனவா்கள் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து குளச்சல் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின், விசைப்படகு மீனவப் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, கரோனா தடுப்பு நடவடிக்கையாக தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் புதிய விசைப்படகுகள் நுழைய தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், மீனவப் பிரதிநிதிகள் சேசாரி, மரியசெல்வன், ஆன்டனி, சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.