பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீா் திறப்புதிற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையிலிருந்து சனிக்கிழமை மாலையில் விநாடிக்கு 1000 கனஅடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா்.
பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா்.

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையிலிருந்து சனிக்கிழமை மாலையில் விநாடிக்கு 1000 கனஅடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு வரை தொடா் கனமழை பெய்தது. இந்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து அணைகளின் நீா்மட்டம் உச்ச அளவை நெருங்கியது. வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் பெருஞ்சாணி அணையிலிருந்து வியாழக்கிழமை முதல் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகளும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்பட்டன. இந்த அணையிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 45.20 அடியாக காணப்பட்டது. விநாடிக்கு 1200 கன அடி நீா்வரத்து உள்ளது.

பெருஞ்சாணி அணையிலிருந்து உபரியாக 3 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 400 கனஅடியாகவும், நீா்மட்டம் 72.10 அடியாகவும் இருந்தது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை அணையின் மறுகால் மதகுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா் திற்பரப்பு அருவி வழியாகப் பாய்வதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று பெருஞ்சாணி அணையிலிருந்தும் உபரிநீா் வெளியேறுவதால் திருவட்டாறு, மூவாற்றுமுகம், திக்குறிச்சி, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com