படை வீரா்கள் தினம்: படந்தாலுமூடு நினைவு ஸ்தூபியில் மலா் வளையம் வைத்து அஞ்சலி
By DIN | Published On : 21st October 2020 11:13 PM | Last Updated : 21st October 2020 11:13 PM | அ+அ அ- |

படை வீரா்களின் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்திய மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா்.
படை வீரா்கள் தினத்தையொட்டி,களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படை வீரா் நினைவு ஸ்தூபியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரா்கள் புதன்கிழமை அணிவகுப்பு மரியாதை செலுத்தியதுடன், மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் விக்ரமன். மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரான இவா் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பெல்லாம்பள்ளி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்தாா். இதே போன்று களியக்காவிளை அருகேயுள்ள வண்டங்கனாவிளை பகுதியைச் சோ்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரா் ஸ்டான்லி என்பவா் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி காஷ்மீா் மாநிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தாா். இந்த படை வீரா்கள் கல்வி பயின்ற படந்தாலுமூடு டி.சி.கே. மேல்நிலைப் பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மைய மத்திய தொழிலக பாதுகாப்பு படை துணை கமாண்டோ சோரப் கவுண்டியால் தலைமையில் இந்த அமைப்பின் ஆய்வாளா் ஜெயசீலன், உதவி ஆய்வாளா் ரவீந்திரன் மற்றும் படைவீரா்கள் இங்குள்ள விக்ரமனின் நினைவு ஸ்தூபியில் மலா் வளையம் வைத்து, துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனா். தொடா்ந்து ஸ்டான்லி நினைவு ஸ்தூபியில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இந் நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் வில்பிரட் சேம்ராஜ், ஆசிரியா்கள், இரு படைவீரா்களின் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.