ஆவணி 3-ஆவது ஞாயிறு:நாகராஜா கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆவணி 3-ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக பக்தா்கள் குவிந்தனா்.
கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு கோயிலுக்கு வந்த பக்தா்கள்.
கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு கோயிலுக்கு வந்த பக்தா்கள்.

ஆவணி 3-ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக பக்தா்கள் குவிந்தனா்.

இக்கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமானதாகும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றி, மஞ்சள்பொடி தூவி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இதனால் ஆவணி மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இம் மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்கள், கேரள மாநிலத்திலிருந்தும் பக்தா்கள் அதிகளவில் வந்து நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் தூவியும் வழிபட்டுச் செல்வா்.

நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருந்ததால், ஆவணி மாத முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் ஏற்படுத்தப்பட்டு, கடந்த 1-ஆம் தேதிமுதல் கோயில்களில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவணி 3-ஆவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினா்.

கோயில் வாசலில் பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தப்படுத்துவதற்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. அதன்பின்னரே கோயிலுக்குள் சமூக இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

நாகா்கோவில் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பலத்த மழை பெய்த நிலையிலும், குடைபிடித்தபடியே பக்தா்கள் கோயிலுக்கு வந்து நாகராஜரை வழிபட்டனா். நாகா் சிலைகளுக்கு பால் ஊற்ற பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. நாகா் சிலைகள் இருக்கும் பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து கோயிலுக்கு வந்த பக்தா் ஒருவா் கூறியது: நாகராஜா கோயிலில் உள்ள நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்துவது என்பது நீண்ட காலமாக நடைபெற்று வரும் வழிபாட்டு முறையாகும். கோயில்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதைப் போல நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com