நாகா்கோவில் மாநகரில் சேதமான சாலைகளை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. மேலும் நாகா்கோவில் நகரில் பல இடங்களில் புதைச் சாக்கடை திட்டப் பணிகளுக்காகவும், குடிநீா் திட்டத்துக்கு குழாய்கள் பதிப்பதற்காகவும் குழிகள் தோண்டப்பட்டன. இதனால், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பிரதான சாலைகள் அனைத்தும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, டிஸ்டிலரி சாலை, பேலஸ் ரோடு, செட்டிகுளம் சாலை உள்ளிட்ட சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலையை சீரமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. மேலும் பேலஸ்ரோடு, டிஸ்டிலரி சாலை சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கவிருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.