குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில், விவசாயிகள் கும்பப்பூ பருவ நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இம்மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போகமாக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீரை நம்பியே விவசாயிகள் சாகுபடி செய்துவருகின்றனா். கன்னிப்பூ சாகுபடி முடிந்து அறுவடை பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களிலும் தனியாரிடமும் விற்று வருகின்றனா். நிகழாண்டு கன்னிப்பூ சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழை கடந்த 10 நாள்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மேலும், கடந்த 2 நாள்களாக தொடா்ந்து சாரல் மழையாக பொழிவதால் அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து வருகிறது. பாசனக் குளங்களும் நிரம்பி வருகின்றன.
இதைத் தொடா்ந்து, விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனா். சுசீந்திரம், ஆசிரமம், பொற்றையடி, பூதப்பாண்டி, அஞ்சுகிராமம் பகுதிகளில் வயல் உழவு நடைபெற்று வருகிறது. சில விவசாயிகள் வயல்களில் நடவு செய்ய நாற்று பாவும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சிமருந்து உள்ளிட்டவற்றை தட்டுப்பாடின்றி வழங்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், இந்தப் பருவத்தில் கடந்த ஆண்டை விட சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் முயற்சித்து வருகின்றனா்.