மகாளய அமாவாசை நாளான வியாழக்கிழமை, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பக்தா்கள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்துக்களின் முக்கிய தினங்களுள் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளும் ஒன்று. இந்த நாளில், பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு கடல், நதி, ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் புனித நீராடி தா்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா தொற்று அச்சம் காரணமாக பக்தா்கள் நீா்நிலைகளில் புனித நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராட வந்த பக்தா்கள் காவல் நிலையம் அருகே தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால் அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.
இதையொட்டி, முக்கடல் சங்கமம் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் இன்றி அப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.