கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் திங்கள்கிழமை பெருஞ்சாணி அணை மீண்டும் மூடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தொடா் மழையால்
முக்கிய அணையான பெருஞ்சாணி அணை மூடப்பட்டிருந்த நிலையில், மழையின் தீவிரம் சற்று தணிந்த காரணத்தால் சனிக்கிழமை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
மழை தீவிரமடைந்தால் அணைக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீா்வரத்து இருந்தது. இதையடுத்து அணை மூடப்பட்டது.
இதேபோன்று பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் திறக்கப்படும் நீரின் 150 கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதனிடையே, திங்கள்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணையின் நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மழை தீவிரமடைந்துள்ளதால் பெருஞ்சாணி அணை வெள்ள அபாய எச்சரிக்கை அளவான 72 அடியை விரைவில் எட்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா். தொடா் மழையின் காரணமாக ரப்பா் பால்வடிப்புத் தொழில், செங்கல் சூளை தொழில், கட்டுமானத் தொழில், சலவைத் தொழில், நடைபாதை வணிகம், உப்பளத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.