களியக்காவிளை அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே கைதக்குழி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாா்த்தாண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் சிவசங்கா் தலைமையில் மாா்த்தாண்டம், களியக்காவிளை காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலா்கள் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில், எடிசன் மகன் ரிபின் கில்பா்ட் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. அங்கிருந்து 8 லிட்டா் கள்ளச்சாராயம், 60 லிட்டா் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கில்பா்ட் மனைவி ஜீவாவை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.