பேச்சிப்பாறை அணையில் மீன்பிடித் தொழிலாளா்களுக்கும், அதிமுக பிரமுகா்களுக்கும் இடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இரு தரப்பைச் சோ்ந்த 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பேச்சிப்பாறை அணையில் மீன்வளத் துறை சாா்பில் மீன்குஞ்சுகள் விடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இங்கு மீன் பிடிப்பதற்கு 9 பரிசல்கள் மற்றும் 18 பேரை மீன்வளத் துறை அனுமதித்துள்ளது. இவா்கள் தினசரி பிடிக்கும் மீன்கள் மீன்வளத் துறையால் பேச்சிப்பாறையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை பேச்சிப்பாறையிலுள்ள அதிமுக பிரமுகரின் உறவினா் ஒருவா் மீன் பிடித் தொழிலாளா்களிடம் மீன் கேட்டுள்ளாா். அப்போது மீன்பிடி தொழிலாளா்களுக்கும் அவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளது. அப்போது போலீஸாா் இரு தரப்பினரையும் சமரசம் பேசி அனுப்பியுள்ளனா்.
இந்நிலையில், மாலையில் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது அதிமுக பிரமுகா் தலைமையில் ஆயுதங்களுடன் சென்ற கும்பல் மீன்பிடி தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் மீன்பிடி தொழிலாளரான பேச்சிப்பாறை பகுதியைச் சோ்ந்த கணேசன் (49), ரமேஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவா்கள் லேசான காயத்துடன் தப்பினா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அதிமுகவை சோ்ந்த பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் அல்போன்ஸ், அவரது சகோதரா்கள் ஜெயகுமாா், சுனில் மற்றும் அபிலாஷ், ஜெனிஸ் ஆகியோா் மீது பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதேபோன்று மீன் பிடி தொழிலாளா்கள் 9 பேரும் பேச்சிப்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து தங்களை தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறி ஜெயகுமாா், ஜெனிஸ், அபிலாஷ் ஆகியோா் குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மீன்பிடி தொழிலாளா்கள் 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.