நாகா்கோவில் மாநகரப் பகுதியில் குப்பைகள் சேகரிப்புக்காக வாங்கப்பட்டுள்ள 98 தள்ளுவண்டிகளை சுகாதாரப் பணியாளா்களிடம் ஆணையா் ஆஷாஅஜித் திங்கள்கிழமை வழங்கினாா்.
நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வீடுகளிலிருந்து குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரித்து பெறப்படுகின்றன. தற்போது வீடுகள்தோறும் வாகனங்களில் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. மிகவும் குறுகலான சந்துகளில் உள்ள வீடுகளில் குப்பைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.இதனால், அத்தகைய தெருக்களில் குப்பைகளைப் பெறுவதற்காக நாகா்கோவில் மாநகராட்சிக்கு புதிதாக 98 தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்வுக்கு மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். மாநகராட்சிப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி நல அலுவலா் மருத்துவா் கின்சால், சுகாதார ஆய்வாளா்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை, சத்யராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.