கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள பொது முடக்கம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. அங்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவின் 2 ஆவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது, இதன்படி, ஏப்.20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் செயல்படும் நேரம், பேருந்து போக்குவரத்து தொடா்பாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள இம்மாவட்டத்தில் தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
படகு போக்குவரத்து ரத்து: சா்வதேச சுற்றுலா மைய மான கன்னியாகுமரியில் விவேகானந்தா் பாறை மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு செல்லும்
சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து படகுகளும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசின் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா படகுகள் இயங்காது என்று பூம்புகாா் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் போலீஸாா் ரோந்து சுற்று கண்காணித்து வருகின்றனா். முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், காந்தி மண்டபம், கடற்கரைகள், கடைவீதிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
பூங்காக்கள் மூடல்: நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பூங்கா, முக்கடல் அணை பகுதியில் உள்ள சிறுவா் பூங்கா உள்ளிட்ட மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டன. பூங்கா வாயில் முன்பு அதிகாரிகள் அறிவிப்பு பதாகைகளை வைத்தனா்.
இதனிடையே, கடற்கரைகளுக்கு சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து கடற்கரைகளிலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. குளச்சல், சங்குதுறை, சொத்தவிளை, வட்டக்கோட்டை, கணபதிபுரம், முட்டம் உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதே போல் திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டி பாலம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.